நடிகை பானுப்ரியா மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு

நடிகை பானுப்ரியா மீது ஆந்திர மாநிலம் சமலகோட்டா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-01-24 14:40 GMT
சென்னை,

அழகிய கண்களால் ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்டவர் நடிகை பானுபிரியா. 80 களில் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர்.  

தற்போது சென்னையில் வசிக்கும் இவர் அதிக படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருக்கிறார். சினிமாவில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்தும் வருகிறார். முக்கியமாக அம்மா, அக்கா வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் ஹீரோயின்களுக்கு டப்பிங் வாய்ஸும் கொடுத்து வருகிறார். 

இந்நிலையில், இவர் தனது வீட்டில் 14 வயது சிறுமியை வேலைக்காரியாக வைத்துக்கொண்டு சம்பளமும் கொடுக்காமல் கொடுமைப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கிழக்கு கோதாவரியில் உள்ள சமால்கோட் என்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் இது தொடர்பாக பெண் ஒருவர் நடிகை பானுப்ரியா மீது புகார் கொடுத்துள்ளார். அதில் தனது "14 வயது மகளை நடிகை பானுப்ரியா சென்னையில் உள்ள தன் வீட்டில் குழந்தைத் தொழிலாளியாக வைத்திருக்கிறார். சம்பளம்கூட கொடுப்பதில்லை. அது மட்டுமின்றி குழந்தையை அடித்துக் கொடுமைப்படுத்தி வருகிறார்." என்று அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், தன் குழந்தையைப் பார்க்கச் சென்றபோது பார்க்கவிடாமல் தடுத்து விரட்டிவிட்டதாகவும் அந்தப் பெண் கூறியிருக்கிறார். 

தனது 14 வயது மகளை பானுப்ரியா அவரது வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக பிரபாவதி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகை பானுப்பிரியா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்