இணையதளத்தில் வைரலாகிறது புதிய படத்துக்காக ரசிகர்கள் உருவாக்கிய ரஜினி தோற்றம்

ரஜினிகாந்த் ‘2.0’ படத்துக்கு பிறகு நடித்த ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு உலகம் முழுவதும் வெளியாகி ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்துள்ள நிலையில் அடுத்த படத்துக்கு தயாராகி உள்ளார்.

Update: 2019-02-03 23:30 GMT
ரஜினிகாந்த் அடுத்த படத்துக்கு தயாராகி உள்ளார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். திரைக்கதை உருவாக்கும் பணி முடிந்துள்ளது. படப்பிடிப்பு மார்ச் மாதம் இறுதியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. 3 மாதங்கள் தொடர்ச்சியாக இதில் ரஜினி நடிக்கிறார்.

இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகாத நிலையில் படத்தை பற்றி பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன. படத்துக்கு நாற்காலி என்று தலைப்பு வைக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டது. இதனை முருகதாஸ் மறுத்தார். கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேசை பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.

முந்தைய படங்களான ரமணாவில் லஞ்சத்தையும், கத்தியில் விவசாயிகள் பிரச்சினைகளையும் சர்காரில் அரசியல்வாதிகள் முறைகேடுகளையும் முருகதாஸ் சொல்லி இருந்தார். ரஜினிகாந்த் படம் முழு அரசியல் கதையாக இருக்கும் என்று தகவல் கசிந்துள்ளது. இந்த நிலையில் முருகதாஸ் இயக்கும் புதிய படத்துக்காக ரஜினிகாந்தின் தோற்றத்தை ரசிகர்கள் உருவாக்கி இணையதளங்களில் வைரலாக்கி உள்ளனர்.

கண்களில் கருப்பு கண்ணாடி, வெள்ளைத்தாடி, வாயில் சுருட்டுடன் பாட்ஷா பட ஸ்டைலில் இந்த போஸ்டரை வடிவமைத்து உள்ளனர். நிஜபடத்தின் போஸ்டர் போலவே சமூக வலைத்தளத்தில் இதனை பரப்பி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்