நடிகை ரமாபிரபா சொத்துகளை அபகரித்தேனா? நடிகர் சரத்பாபு விளக்கம்

தமிழ் திரையுலகில் 1970 மற்றும் 80-களில் முன்னணி நடிகராக இருந்தவர் சரத்பாபு. முள்ளும் மலரும், நிழல் நிஜமாகிறது, உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, அண்ணாமலை, சலங்கை ஒலி, முத்து உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

Update: 2019-02-05 23:15 GMT
தெலுங்கிலும் முன்னணி நடிகராக இருந்தார். இவரும், நடிகை ரமாபிரபாவும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து பின்னர் பிரிந்து விட்டனர். பின்னர் நடிகர் நம்பியார் மகள் சினேகாவை திருமணம் செய்து அவரையும் விவாகரத்து செய்து விட்டார்.

இந்த நிலையில் நடிகை ரமாபிரபா தனது சொத்துகளை சரத்பாபு அபகரித்து விட்டதாக ஐதராபாத்தில் பரபரப்பு புகார் கூறியுள்ளார். இவர் தமிழில் அன்புக்கு நான் அடிமை, 47 நாட்கள் உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு-2 படத்தில் பாட்டியாக வந்தார்.

அவர் கூறும்போது, “நானும், சரத்பாபுவும் 1980-களில் ஒன்றாக வாழ்ந்தோம். 1988-ல் அவரை பிரிந்து விட்டேன். அப்போது ஏமாற்றி எனது சொத்துகளை அபகரித்து விட்டார். சென்னையில் இருந்த எனது வீட்டையும் பறித்துக் கொண்டார்” என்றார். இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு சரத்பாபு பதில் அளித்து கூறியதாவது:-

“சினேகாவை 1990-ல் திருமணம் செய்தேன். அதற்கு முன்பு நானும் ரமா பிரபாவும் சேர்ந்து வாழ்ந்தோம். அதற்கு உறவு இல்லை. எனவே அவர் எனது முதல் மனைவி என்பது தவறு. நாங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. நான் பிறக்கும்போதே வசதியாக இருந்தவன். மற்றவர்கள் சொத்துகளை பறிக்க வேண்டிய அவசியம் இல்லை.

கதாநாயகனாக அறிமுகமாகி 40 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். என்னை கே.பாலசந்தர் அறிமுகப்படுத்தினார். அப்போது ரூ.60 கோடி மதிப்பு பெறும் விவசாய நிலத்தை விற்று சென்னை உமாபதி தெருவில் ஒரு வீடு வாங்கினேன். அதில் வசிக்குமாறு ரமாபிரபாவுக்கு கொடுத்தேன். பின்னர் அந்த வீட்டை திருப்பி வாங்கிக் கொண்டேன். இதில் என்ன தவறு இருக்கிறது. எனது பெயரை கெடுக்கும் நோக்கில் ரமாபிரபா தவறான குற்றச்சாட்டுகள் கூறி வருகிறார்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்