சுவரில் ஏறி அக்‌ஷய்குமார் வீட்டில் குதித்தவர் கைது

பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் தமிழில் ரஜினிகாந்துடன் 2.0 படத்தில் நடித்து இருந்தார்.

Update: 2019-02-07 22:15 GMT
அக்‌ஷய்குமார் வீடு மும்பை ஜூஹூ பகுதியில் உள்ளது. இந்த வீட்டுக்கு அரியானா மாநிலம் சோனிபேட் தட்வள்ளி என்ற ஊரை சேர்ந்த அங்கித் கோஸ்வாமி (வயது 20) என்ற வாலிபர் வந்தார். இவர் பங்களா காவலாளியிடம் நான் அக்‌ஷய்குமாரின் தீவிர ரசிகன் அவரை பார்க்க வேண்டும் என்று கூறினார். பாதுகாவலர்கள் அவரை உள்ளே விட மறுத்துவிட்டனர். இதனால் திரும்பி சென்ற அந்த வாலிபர் இரவு 2 மணிக்கு மீண்டும் அக்‌ஷய்குமார் வீட்டுக்கு வந்தார். பாதுகாவலர்களுக்கு தெரியாமல் காம்பவுண்டு சுவரில் ஏறி வீட்டுக்குள் குதித்தார்.

இதனை பாதுகாவலர் பார்த்துவிட்டார். அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். ஜூஹூ போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை கைது செய்தனர். இந்த சம்பவம் நடந்தபோது அக்‌ஷய்குமார் வீட்டில் இருந்தார். இதுகுறித்து போலீசார் கூறும்போது, “அக்‌ஷய்குமார் வீட்டு முகவரியை கூகுளில் தேடி கண்டுபிடித்து அவரை பார்ப்பதற்காக வந்துள்ளார் அங்கித் கோஷ்வாமி. இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்துள்ளது. இதனால் அக்‌ஷய்குமாரை சந்திக்க வந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்