தொழில் அதிபரை மணக்கிறார் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா திருமண வரவேற்பு

ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா, தொழில் அதிபர் விசாகனை 2-வது திருமணம் செய்துகொள்கிறார். இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

Update: 2019-02-08 21:52 GMT
சென்னை,

நடிகர் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என்று 2 மகள்கள் உள்ளனர். ஐஸ்வர்யா நடிகர் தனுசை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சவுந்தர்யா ‘அன்பே ஆருயிரே, மஜா, சண்டக்கோழி, சிவகாசி, சென்னை 28’ உள்பட பல படங்களுக்கு கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றி உள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கிய கோவா படத்தை தயாரித்தார். ரஜினி நடித்த ‘கோச்சடையான்’ அனிமேஷன் படத்தையும், தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தையும் டைரக்டு செய்துள்ளார். சவுந்தர்யாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து, கருத்து வேறுபாடு காரணமாக 2 வருடங்களுக்கு முன்பு கணவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். இவருக்கு வேத் என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில், சவுந்தர்யாவுக்கு தொழில் அதிபர் விசாகன் என்பவருடன் திருமணம் நிச்சயமாகி உள்ளது. விசாகன் அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்துள்ளார். இவர் தொழில் அதிபர் வணங்காமுடியின் மகன். ‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். தயாரிப்பு நிறுவனம் மற்றும் மருந்து கம்பெனியும் நடத்துகிறார்.

சவுந்தர்யா-விசாகன் திருமணம் வருகிற 11-ந் தேதி காலை 9 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. திருமணத்தையொட்டி சென்னை போயஸ் கார்டனில் நாளை (10-ந் தேதி) மற்றும் 12-ந் தேதி நடைபெறும் சடங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள இருப்பதால் இரு நாட்களும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் மனைவி லதா ஏற்கனவே போலீசில் மனு அளித்து இருக்கிறார்.

இந்த நிலையில், சவுந்தர்யா-விசாகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

ரஜினிகாந்தும், அவரது மனைவி லதாவும் இதில் கலந்து கொண்டனர். உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த பலர் இதில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

மேலும் செய்திகள்