கந்து வட்டி கும்பலுடன் தொடர்பா? - நடிகர் கருணாகரன் விளக்கம்

கந்து வட்டி கும்பலுடன் தொடர்பு குறித்து நடிகர் கருணாகரன் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2019-02-12 22:29 GMT

பிரபல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் கருணாகரன் மீது ‘பொதுநலன் கருதி’ என்ற படத்தை இயக்கிய சீயோன் மற்றும் படத்தின் இணை தயாரிப்பாளர் ஆகியோர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில் அவர் நடித்துள்ள ‘பொதுநலன் கருதி’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை என்றும், இதுபற்றி கேட்டதற்கு கந்துவட்டி கும்பலை அனுப்பி மிரட்டுகிறார் என்றும் புகாரில் கூறியிருந்தனர்.

இதற்கு விளக்கம் அளித்து கருணாகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“கந்து வட்டி கும்பலை அனுப்பி இயக்குனரை மிரட்டியதாக என்மீது புகார் அளித்துள்ளனர். எனக்கும் எந்த கந்து வட்டிக்காரருக்கும் தொடர்பு இல்லை. நான் அப்படி வளரவில்லை. தான் நடித்த படம் நன்றாக ஓடவேண்டும் என்றுதான் ஒவ்வொரு நடிகரும் விரும்புவார். பொதுநலன் கருதி படத்தில் உயிரை பணயம் வைத்து நடித்து இருக்கிறேன்.

கந்துவட்டிக்காரர்களுடன் சேர்ந்து படத்துக்கு எதிராக நான் செயல்படுவதாக கூறுவதில் உண்மை இல்லை. கடனால் பாதிக்கப்பட்ட பல விவசாயிகளுக்கும், புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி செய்து இருக்கும் என்னை கந்துவட்டி கும்பலுடன் தொடர்புபடுத்தி பேசுவது வேதனையாக இருக்கிறது.

கந்துவட்டிகாரர்களுடன் சேர்ந்து வன்முறையை நம்பி வாழும் தேவையில் நான் இல்லை. என்மீது இயக்குனரும், இணை தயாரிப்பாளரும் சொல்லும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை.” இவ்வாறு கருணாகரன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்