ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி - நடிகர் சூர்யா வேண்டுகோள்

ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்குவது குறித்து நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2019-02-13 23:15 GMT

நடிகர் சூர்யாவும், கார்த்தியும் அகரம் அறக்கட்டளை மூலம் வறுமையால் கல்வி கற்க முடியாமல் இருக்கும் ஏழை மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்கி வருகிறார்கள். அவர்களுக்கான கல்வி கட்டணத்தை அகரம் அறக்கட்டளை மூலம் செலுத்துகின்றனர். தங்கி படிப்பதற்கும் வசதி செய்து கொடுத்துள்ளனர்.

தற்போது இலவச கல்வி வழங்க தகுதியான ஏழை மாணவர்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது. இதற்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்று நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில் சூர்யா கூறியிருப்பதாவது:-

“ஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம். அரசு பள்ளி மாணவர்கள் கல்லூரிகளில் உயர் கல்வி பெற அகரம் பவுண்டேஷன் கடந்த பத்தாண்டுகளாக துணை புரிகிறது. பெற்றோர்களை இழந்த ஆதரவற்ற வறுமை காரணமாக மேற்கொண்டு கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறது.

இதுவரை சுமார் 2500 மாணவர்கள் அகரம் விதைத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். 2019-ம் ஆண்டு பிளஸ்-2 தேர்வு எழுதுகிற மாணவர்களில் தகுதியும், திறமையும் வாய்ந்த ஏழை மாணவர்களை அகரத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெருமக்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வறுமை மற்றும் குடும்ப சூழல் காரணமாக கல்வியை தொடர முடியாமல் போகிற மாணவர்கள் அகரம் அறக் கட்டளையை தொடர்புகொள்ளலாம்.” இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்