விஷாலுடன் இணைந்து நடித்தது ஏன்? ராதாரவி விளக்கம்

விஷாலுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது என்று நடிகர் ராதாரவி கூறினார்.

Update: 2019-02-18 23:30 GMT
நடிகர் சங்க தேர்தலில் விஷாலும், ராதாரவியும் எதிரெதிராக நின்று மோதிக்கொண்டனர். ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளும் கூறினார்கள். தற்போது ‘அயோக்கியா’ படத்தில் இவரும் சேர்ந்து நடித்துள்ளனர். இதனால் சமரசம் ஆகிவிட்டார்களா? என்ற பரபரப்பு ஏற்பட்டது. விஷாலுடன் நடித்தது குறித்து ராதாரவியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

‘‘நடிகர் சங்க தேர்தலுக்கு பிறகு அயோக்கியா படத்தில் விஷாலும் நானும் சேர்ந்து நடிக்கிறோம். விஷாலுடன் நடித்தது நல்ல அனுபவமாகவும் வசதியாகவும் இருந்தது. விஷாலும் அதே உணர்வில் இருந்தார். நடிப்பது எனது வேலை. நடிகர் சங்கம் வேறு, நடிப்பு தொழில் வேறு. 

படப்பிடிப்பில் நானும் விஷாலும் ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தோம். எனக்கு அவர் ஒத்துழைப்பு கொடுத்தார். அன்பாகவும் இருந்தார். இந்த படத்தில் நடிக்க இயக்குனர் அழைத்ததும் எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருப்பதை உணர்ந்தேன். மற்ற கதாபாத்திரங்களும் வலுவாகவே இருந்தன. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். 

கே.எஸ்.ரவிக்குமார், பார்த்திபன் ஆகியோரும் படத்தில் உள்ளனர். விஷாலுக்கு நான் நடிப்பதில் விருப்பம் இருக்கிறதா? என்று கேட்கவில்லை. ஒரு படமாக நடிக்க அழைத்தனர். என் சம்பளத்தை பேசினேன். ஒப்புக்கொண்டேன். படம் சிறப்பாக வந்துள்ளது. மேலும் சசிகுமார் படத்தில் நடிக்கிறேன், தர்மபிரபு படத்தில் யோகிபாபு எமனாகவும், நான் அப்பா எமனாகவும் நடிக்கிறோம். மாயவன் படத்திலும் நடிக்கிறேன்.’’

இவ்வாறு ராதாரவி கூறினார்.

மேலும் செய்திகள்