முருகதாஸ் இயக்கும் படத்தில் இரட்டை வேடத்தில் ரஜினிகாந்த்?

முருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

Update: 2019-02-19 23:30 GMT
ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தள்ளிப்போகிறது. அடுத்த வருடம் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதம் கட்சி தொடங்கி முழுநேர அரசியலில் குதிக்கிறார். அதற்கு முன்பாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க அவர் முடிவு செய்துள்ளார். இது ரஜினிக்கு 166-வது படம் ஆகும். படப் பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

முந்தைய படங்களில் லஞ்சம், விவசாயிகள் பிரச்சினைகள், ஊழல் ஆகியவற்றை முருகதாஸ் சொல்லி இருந்தார். எனவே ரஜினிகாந்த் படத்தை முழு அரசியல் படமாக எடுக்க இருப்பதாகவும் படத்துக்கு நாற்காலி என்று தலைப்பு வைத்து இருப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால் படத்துக்கு நாற்காலி பெயரை தேர்வு செய்யவில்லை என்று முருகதாஸ் மறுத்தார்.

படத்தில் நடிக்கும் இதர நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் பெயர் அடிபட்டது. ஆனால் இப்போது நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சந்திரமுகி படத்தில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாகவும், சமூக சீர்திருத்த போராளியாகவும் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் பரவி வருகிறது. ஆனாலும் இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. ஏற்கனவே அவர் அதிசய பிறவி, போக்கிரி ராஜா, பில்லா, ராஜாதிராஜா, நெற்றிக்கண், ஜானி, முத்து, எந்திரன், 2.0 உள்ளிட்ட படங்களில் 2 வேடங்களில் நடித்துள்ளார்.

மேலும் செய்திகள்