கன்னட நடிகர் மீது நடிகை விஜயலட்சுமி புகார்

கன்னட நடிகர் ரவிபிரகாஷ் மீது நடிகை விஜயலட்சுமி போலீஸ் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.

Update: 2019-03-11 21:45 GMT
பூந்தோட்டம் என்ற படத்தில் தேவயானி தங்கையாக வந்த விஜயலட்சுமி, ப்ரண்ட்ஸ் படத்தில் விஜய் தங்கையாகவும், சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்து பிரபலமானார். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்து இருந்தார். சமீபத்தில் திரைக்கு வந்த மீசையை முறுக்கு படத்திலும் நடித்தார். கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். பெங்களூருவில் வசித்து வரும் விஜயலட்சுமி சமீபத்தில் உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் அவர் தவிப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து அவரது சகோதரி உஷா தேவி பண உதவி செய்யும்படி திரையுலகினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதைத்தொடர்ந்து கன்னட பட உலகினர் அவருக்கு உதவி வருகிறார்கள். பிரபல கன்னட நடிகர் ரவிபிரகாஷ் சில நாட்களுக்கு முன்பு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று உடல்நலம் விசாரித்து ரூ.1 லட்சம் வழங்கினார். அவர் மீது விஜயலட்சுமி தற்போது புட்டேனஹள்ளி போலீஸ் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.

மனுவில், “நடிகர் ரவிபிரகாஷ் மருத்துவமனையில் என்னை சந்தித்து ரூ.1 லட்சம் கொடுத்தார். அதன்பிறகு எனது செல்போன் எண்ணுக்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்பியும், ஆபாசமாக பேசியும் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்” என்று கூறியுள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரவிபிரகாஷ் கூறும்போது, “விஜயலட்சுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. அவருக்கு உதவியது தவறு என்று இப்போது உணர்கிறேன்” என்றார்.

மேலும் செய்திகள்