விவாகரத்து செய்ய முடிவா? - பிரியங்கா சோப்ரா மறுப்பு

விவாகரத்து செய்ய உள்ளதாக வெளியான தகவலை நடிகை பிரியங்கா சோப்ரா மறுத்துள்ளார்.

Update: 2019-03-31 23:00 GMT

பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும், அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசும் காதலித்து கடந்த டிசம்பர் மாதம் ராஜஸ்தானில் உள்ள அரண்மனையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்து 117 நாட்கள் கடந்துள்ள நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொள்ள தயாராகி வருவதாக லண்டனில் இருந்து வெளியாகும் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.

இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் இடையே திருமணத்துக்கு பிறகு சுமுகமான உறவு இல்லை. வேலை மற்றும் விருந்துக்கு செல்வது உள்ளிட்ட விஷயங்களில் இருவருக்கும் கருத்து ஒற்றுமை இல்லை. தனது கட்டுப்பாட்டில் நிக் ஜோனசை வைத்துக்கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் பிரியங்காவுக்கு உள்ளது.

திருமணத்துக்கு முன்பு அமைதியானவராக இருந்த பிரியங்கா சோப்ரா இப்போது கோபக்காரராக இருப்பதும் 36 வயது நிரம்பிய அவர் 21 வயது நிக் ஜோனாசுடன் பார்ட்டிகளுக்கு செல்வதையே அதிகம் விரும்புகிறார் என்று கணவர் குடும்பத்தினர் ஆத்திரத்தில் உள்ளனர். இதனால் இருவரும் விவாகரத்துக்கு தயாராகி வருகிறார்கள் என்று லண்டன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

விவாகரத்து செய்தியில் உண்மை இல்லை. வெறும் வதந்திதான் என்று பிரியங்கா சோப்ரா சார்பில் அவரது செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக்ஜோனஸ் மற்றும் அவரது சகோதரர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று வெளியிட்டு விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும் செய்திகள்