கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக ஓவியா படப்பிடிப்பு பாதியில் ரத்து

காதல், நகைச்சுவை, அதிரடியான சண்டை காட்சிகள் ஆகிய மூன்று அம்சங்களும் கலந்து, ‘கணேசா மீண்டும் சந்திப்போம்’ என்ற படம் தயாராகி இருக்கிறது.

Update: 2019-04-02 07:06 GMT
விரைவில் திரைக்கு வரயிருக்கும் இந்த படத்தை பற்றி அதன் டைரக்டர் ரதீஷ் ஏராட் கூறியதாவது:-

“மதுரையில் மரியாதையுடன் வாழ்ந்து கொன்டிருக்கும் ஒருவனை பற்றிய கதை, இது. தன் குடும்ப உறவுகளை விட, அவன் வைத்திருக்கும் ‘பைக்’ மீதுதான் அவனுக்கு உயிர். அவன் தன் மனைவியிடம் கூட சொல்லாத பல ரகசியங்கள், அந்த ‘பைக்’குக்கு தெரியும். உயிருக்கு உயிராக நேசித்த அந்த ‘பைக்’ மூலம் அவனுக்கு மிகப்பெரிய பிரச்சினை உருவாகிறது.

அதனால் அவன் நிம்மதியை இழந்து தவிக்கிறான். எதனால் அவனுக்கும், ‘பைக்’குக்கும் பிரச்சினை உருவானது? அந்த பிரச்சினை என்ன? என்பதை நகைச்சுவையுடன் கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் மதுரை-சென்னையை மையமாக வைத்து திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறேன்.

பிரிதிவி பாண்டியராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். ‘திமிரு’ படத்தின் வில்லன் ஐ.எம்.விஜயன், சிங்கம்புலி, தேவிகா, தீப்பெட்டி கணேசன், கிங்காங், மதுமிதா ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். அருண் விக்ரமன் கிருஷ்ணன் தயாரித்துள்ளார்.

சென்னை, மதுரை, கும்பகோணம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. கும்பகோணத்தில் படப்பிடிப்பு நடத்தியபோது, ஓவியாவை பார்க்க கட்டுக்கடங்காத அளவில் ரசிகர்கள் கூடிவிட்டார்கள். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால், பாதியிலேயே படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அங்கே படமாக்க முடியாத காட்சிகளை பொள்ளாச்சியில் படமாக்கினோம்.”

மேலும் செய்திகள்