விஜய்க்கு எதிரான வார்த்தைகள் - வருத்தம் தெரிவித்த கருணாகரன்

விஜய்க்கு எதிரான வார்த்தைகளை பயன்படுத்தியதற்கு நடிகர் கருணாகரன் வருத்தம் தெரிவித்தார்.

Update: 2019-04-19 23:03 GMT

நகைச்சுவை நடிகர் கருணாகரனுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்னால் மோதல் ஏற்பட்டது. சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது குறித்து கருணாகரன் டுவிட்டரில் வெளியிட்ட கருத்தால் இந்த சர்ச்சை உருவாகி சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் திட்டித்தீர்த்தனர்.

கருணாகரனுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் ஹேஷ்டேக்கை உருவாக்கி தொடர்ச்சியாக அவரை கண்டித்து வந்தனர். கருணாகரன் ஆந்திராவை சேர்ந்தவர் என்றும் கூறினர். நான் ரெட்ஹில்ஸ்காரன் ஏன் ஆந்திராவில் பிறந்தால் தவறா? நான் தமிழ்நாட்டை சேர்ந்தவனா என்ற கேள்வியை கேட்காதீர்கள். நான் எப்போதாவது சர்கார் தமிழ் தலைப்பா? என்று கேட்டேனா? என்றார்.

மேலும் அவர் கூறும்போது, விஜய் சொன்ன குட்டி கதையில் குறிப்பிட்டது அரசியலையா? சினிமாவையா என்று தெளிவாக சொல்லவில்லை என்றுதான் எனக்கு கோபம் இருந்தது. அதற்காக ரசிகர்கள் என்னை மிரட்டி வருகிறார்கள். அதே சமயம் விஜய்யை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றார்.

இந்த நிலையில் விஜய் ரசிகர்களிடம் தற்போது கருணாகரன் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில், “நான் யாரையும் புண்படுத்துவது இல்லை. எனக்கு பிடித்த நடிகரான விஜய்க்கு எதிராக வெறுக்கும்படியான அந்த வார்த்தையை நான் பயன்படுத்தி இருக்கக்கூடாது. சமூக வலைத்தளத்தில் எனது வார்த்தைகள் யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிக்கவும்” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்