டைரக்டராகும் நடிகர் விவேக்

நடிகர் விவேக் டைரக்டராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-22 00:03 GMT
நகைச்சுவை நடிகர் விவேக் கதை நாயகனாக நடித்து திரைக்கு வந்துள்ள படம் வெள்ளைப்பூக்கள். இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து விவேக் கூறியதாவது:-

“நான் நடித்துள்ள வெள்ளைப்பூக்கள் படத்தின் கதையும், எனது கதாபாத்திரமும் சிறப்பாக இருப்பதாக பலரும் பாராட்டுகிறார்கள். ரசிகர்கள் வரவேற்பினால் இதுபோன்ற படங்கள் இனிமேல் அதிகம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளோம். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். நான் சினிமாவில் நடிக்க வந்து 32 வருடங்கள் ஆகிவிட்டன. இதுவரை 300 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். நகைச்சுவையில் மக்களை சிரிக்க வைத்த திருப்தி இருக்கிறது. கதையின் நாயகனாகவும் சில படங்களில் நடித்துவிட்டேன். அடுத்து சினிமா டைரக்டராகும் எண்ணம் உள்ளது.

இயக்குனர் மணிரத்னம், நடிகர் மம்முட்டி உள்ளிட்ட சிலர் படம் இயக்கும்படி என்னை வற்புறுத்தி உள்ளனர். இப்போது திரைக்கதை ஒன்றை எழுதிக்கொண்டு இருக்கிறேன். அடுத்த வருடம் புதிய படத்தை டைரக்டு செய்வேன். இயற்கை விவசாயம் சார்ந்த படம் ஒன்றில் நடிக்க ஆசை உள்ளது.

அப்துல்கலாம் என்னை மரக்கன்றுகள் நட ஊக்குவித்தார். இயற்கை விவசாயம் படம் அதை சார்ந்த கதை என்பதால் அப்படிப்பட்ட படமொன்றில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.” இவ்வாறு விவேக் கூறினார்.

மேலும் செய்திகள்