சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்

சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படம் உருவாக உள்ளது.

Update: 2019-04-22 00:24 GMT

இந்தியில் 2 அல்லது 3 கதாநாயகர்கள் சேர்ந்து நடிக்கும் படங்கள் அதிகம் வருகின்றன. ஆனால் தமிழில் அப்படி படங்கள் வருவது அரிதாகவே உள்ளன. இந்த நிலையில் சிம்புவும், கவுதம் கார்த்திக்கும் புதிய படமொன்றில் இணைந்து நடிக்கிறார்கள். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

இந்த படத்தை புதுமுக இயக்குனர் நார்தன் டைரக்டு செய்கிறார். இவர் கே.ஜி.எப். படம் மூலம் பிரபலமான டைரக்டர் பிரசாந்த் நீலிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர். படத்தை ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். நவீன்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பெரிய பட்ஜெட் படமாக உருவாகிறது. படம் குறித்து இயக்குனர் நார்தன் கூறியதாவது:-

“ஆக்‌ஷன் கலந்த திகில் படமாக இது தயாராகிறது. படத்தில் சிம்புவை இதுவரை நடிக்காத வித்தியாசமான வேடத்தில் பார்க்கலாம். அழுத்தமான கதாபாத்திரமாக இருக்கும். கவுதம் கார்த்திக்கும் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்துக்கு கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. ஜூன் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளோம்.” இவ்வாறு அவர் கூறினார்.

இது சிம்புவுக்கு 45-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பை விரைவில் முடித்துவிட்டு புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

மேலும் செய்திகள்