இணையதளத்தில் திருட்டுத்தனமாக ரஜினிகாந்த், நயன்தாராவின் ‘தர்பார்’ பட காட்சிகள் கசிந்தன

மும்பையில் நடந்து வரும் தர்பார் பட காட்சிகள் இணையதளங்களில் கசிந்தன.

Update: 2019-04-26 23:30 GMT
ரஜினிகாந்த் படப்பிடிப்புகளை தமிழகத்தில் நடத்தினால் ரசிகர்கள் அன்பு தொல்லைகள் இடையூறாக இருக்கும் என்று கருதியும், கதாபாத்திரங்களின் தோற்றங்களை செல்போனில் படம்பிடித்து வெளியிடுவதை தடுக்கவும் வெளிமாநிலங்களுக்கு சென்று விடுகின்றனர். ஆனால் அங்கேயும் கேமராவுடன் ரசிகர்கள் திரள்கிறார்கள்.

ரஜினிகாந்தின் முந்தைய படங்களான கபாலி, காலா படப்பிடிப்பு தளங்களில் திருட்டுத்தனாக எடுத்த படங்கள் இணையதளங்களில் வெளிவந்தன. ‘தர்பார்’ படத்துக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தார். படப்பிடிப்பு அரங்குக்குள் துணை நடிகர், நடிகைகள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

ஆனால் அதையும் மீறி ரஜினிகாந்தின் தோற்றங்களை ரகசியமாக படம்பிடித்து இணையதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள். ரஜினிகாந்துக்கு கதாபாத்திரத்துக்கு ஏற்ப போலீஸ் உடை அணிவித்து ஸ்டூடியோவில் போட்டோ ஷூட் நடத்தினர். அந்த தோற்றம் வெளியாகி விடக்கூடாது என்று எச்சரிக்கையாக இருந்தனர். ஆனால் யாரோ அதை செல்போனில் படம் பிடித்து இணையதளத்தில் கசியவிட்டுவிட்டார்.

மும்பையில் கடந்த 30-ந் தேதி முதல் தொடர்ந்து நடந்து வரும் தர்பார் படப்பிடிப்பையும் பாதுகாப்பை மீறி திருட்டுத்தனமான படம் பிடித்து இணையதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். ரஜினிகாந்தும் யோகிபாபுவும் நடித்த காட்சி, ரஜினிகாந்த் கிரிக்கெட் விளையாடுவது, நயன்தாரா நடந்து வரும் காட்சிகள் போன்றவற்றை செல்போனில் படம் எடுத்து இணையதளங்களில் கசிய விட்டுள்ளனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும் செய்திகள்