மீண்டும் நடிக்கும் விஜயசாந்தி, விசித்திரா

முன்னாள் கதாநாயகிகள் பலர் மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளனர். அந்த வரிசையில் விஜயசாந்தி, விசித்திரா ஆகியோரும் நடிக்க வருகிறார்கள்.

Update: 2019-04-28 23:24 GMT
விஜயசாந்தி தமிழ் பட உலகில் 1980-களில் தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். இரண்டு மொழிகளிலும் வெளியான வைஜயந்தி ஐ.பி.எஸ். படத்தில் அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து பேசப்பட்டார்.

இந்த படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. 2006-ல் சினிமாவை விட்டு ஒதுங்கி ஆந்திர அரசியலில் குதித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு படத்துக்கு அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தில் நடிக்க விஜயசாந்தி ரூ.2 கோடி சம்பளம் கேட்டதாகவும், அதை கொடுக்க தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்து தமிழ் படத்தில் நடிக்கவும் தயாராகிறார்.

இதுபோல் 1990-களில் முன்னணி நடிகையாக இருந்த விசித்திராவும் மீண்டும் நடிக்க வருகிறார். இவர் தலைவாசல் படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து தேவர் மகன், அமராவதி, ரசிகன், முத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மீண்டும் நடிப்பது குறித்து விசித்திரா கூறும்போது, “நான் 90 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். 18 வருடங்களுக்கு முன்னால் நடிப்பதை நிறுத்திவிட்டேன். இப்போது நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வருகின்றன. எனக்கும் நடிக்க அழைப்பு வருகிறது. வலுவான குணசித்திர வேடங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன். இதற்காக கதைகள் கேட்டு வருகிறேன்” என்றார்.

மேலும் செய்திகள்