“படங்கள் ரசிகர்களை அழவைக்க கூடாது” நடிகை தமன்னா பேட்டி

தமன்னா நடித்த ‘தேவி-2’ படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது. மேலும் 3 தெலுங்கு படங்களிலும், ஒரு இந்தி படத்திலும் நடிக்கிறார்.

Update: 2019-05-02 23:30 GMT
நடிக்க விரும்பும் கதாபாத்திரங்கள் பற்றி தமன்னா அளித்த பேட்டி வருமாறு:-

“தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள் சந்தோஷமாக திரும்பி போகிற மாதிரி கதாபாத்திரங்களில் நடிப்பதுதான் எனது விருப்பமாக உள்ளது. கஷ்டம், கண்ணீர் போன்றவற்றை காட்டி அவர்களை அழ வைக்க கூடாது. அதுமாதிரி அழவைக்கிற கதாபாத்திரங்களில் என்னால் நடிக்க முடியாது. சினிமாவில் எப்போதும் உஷாராக இருக்க வேண்டும். சுறுசுறுப்பாக இருக்கிற கதாபாத்திரங்களில் வருவதுதான் எனக்கு பிடிக்கும். 

எனது வயதில் இருக்கும் பெண்கள் வாழ்க்கையை எந்த அளவுக்கு நேசிப்பார்கள். அவர்களுக்கு புரிந்து கொள்ளும் சக்தி எப்படி இருக்கும். அவர்கள் ஆசைகள், லட்சியங்கள் எப்படி இருக்கும்? அவர்கள் செய்கிற கலாட்டா எந்த அளவு இருக்கும்? என்பதெல்லாம் நான் நடிக்கிற கதாபாத்திரங்களில் பிரதிபலிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கு நெருக்கமான கதாபாத்திரங்களில் நடிப்பதில்தான் எனக்கு சந்தோஷமாக இருக்கும்.

சினிமா ஆரம்பித்ததில் இருந்து முடிவது வரை ரசிகர்களை குடும்ப உறவுகள் பெயரால் அழவைத்து அந்த கதாபாத்திரமும் அழுவது போன்ற கதைகளில் என்னால் நடிக்க முடியாது. ரசிகர்கள் பணம் கொடுத்து கஷ்டமெல்லாம் மறந்து ஒரு புதிய உலகத்தில் சஞ்சரிக்க தியேட்டருக்கு வருகிறார்கள். அவர்கள் எல்லா கவலைகளையும் மறந்து விட்டு சிரித்துக்கொண்டே வெளியே போகவேண்டும். மாறாக, டன் கணக்கில் வேதனைகளை சுமந்து கொண்டு போகக் கூடாது. நானும் இதுபோன்ற படங்களை பார்க்கத்தான் ஆசைப்படுகிறேன்.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்