மனதுக்கு பிடித்திருந்தால் “வயதில் சிறியவராக இருந்தாலும் மணப்பேன்” - ரகுல்பிரீத் சிங்

மனதுக்கு பிடித்திருந்தால், வயதில் சிறியவராக இருந்தாலும் மணப்பேன் என நடிகை ரகுல்பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-07 23:00 GMT

தமிழில் தடையற தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று படங்களில் நடித்து பிரபலமான ரகுல்பிரீத்சிங், தற்போது சூர்யாவுடன் என்.ஜி.கே. மற்றும் சிவகார்த்திகேயனுடன் புதிய படம் ஆகியவற்றில் நடிக்கிறார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். ரகுல்பிரீத் சிங் அளித்த பேட்டி வருமாறு:-

“நான் ஆரம்பத்தில் பல தவறுகள் செய்தேன். அதற்காக வருந்தவில்லை. செய்த தவறை பாடமாக எடுத்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும். நான் தவறு செய்யாமல் இருந்திருந்தால் இந்த அளவு வெற்றி கிடைத்து இருக்காது. வெற்றியின் மதிப்பு தெரிய வேண்டுமானால் தோல்விகளை சந்திக்க வேண்டும்.

சினிமாவுக்கு வந்த புதிதில் எதுவும் தெரியாது. அப்போது செய்த சில தவறுகள் எனக்கு பாடங்களை கற்றுத்தந்தன. இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு அதுதான் காரணம். வாழ்க்கை யாரையும் விட்டு வைக்காது. ஒரு ஆட்டம் ஆடிவிடும். அந்த ஆட்டத்தில் வெற்றி தோல்விகள் சகஜம்.

நான் நடிக்கும் எல்லா படங்களும் வெற்றி பெறும் என்று சொல்ல மாட்டேன். அது என் கையில் இல்லை. கதையில் உள்ள எனது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்யும் முயற்சியை செய்கிறேன். நடிகையாக நிறைய பேர் ஆசைப்படுகிறார்கள். அந்த அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது.

திருமணம் பற்றி கேட்கிறார்கள். எனது மனதுக்கு பிடித்தவரை மணக்க தயாராக இருக்கிறேன். அவர் வயதில் சிறியவரா? பெரியவரா என்றெல்லாம் பார்க்க மாட்டேன். பிடித்து இருந்தால் மணப்பேன்.” இவ்வாறு ரகுல்பிரீத் சிங் கூறினார்.

மேலும் செய்திகள்