நடிகர் சங்க நில முறைகேடு வழக்கு: போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜராகவில்லை

நடிகர் சங்க நில முறைகேடு வழக்கு விசாரணைக்கு நடிகர் விஷால் ஆஜராகவில்லை. படப்பிடிப்பு இருப்பதால் வேறொரு நாளில் வருவதாக கடிதம் கொடுத்துள்ளார்.

Update: 2019-05-11 23:00 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் வேங்கடமங்கலம் கிராமத்தில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமான 26 சென்ட் இடத்தை விற்பனை செய்து, பணத்தை கையாடல் செய்ததாக பொதுச்செயலாளர் ராதாரவி உள்பட முன்னாள் நிர்வாகிகளுக்கு எதிராக தற்போதைய பொதுச்செயலாளர் நடிகர் விஷால் காஞ்சீபுரத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்திருந்தார்.

இதற்கிடையே நடிகர் சங்கத்தலைவர் நாசர், கடந்த ஆண்டு மே 8-ந்தேதி காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி தங்கள் தரப்பு வாக்குமூலத்தையும், வழக்கு தொடர்பான ஆவணங்களையும் கொடுத்து விட்டு சென்றார்.

இந்தநிலையில் நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் ராதாரவி, சரத்குமார் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்து, காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைக்கு தேவையான உரிய ஆவணங்களை, மே 10-ந்தேதி (நேற்று முன்தினம்) நேரில் ஆஜராகி தாக்கல் செய்யும்படி நடிகர் விஷாலுக்கு காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

ஆனால் நடிகர் விஷால் நேரில் ஆஜராகவில்லை. சினிமா படப்பிடிப்பு இருப்பதால் வேறோரு நாளில் ஆஜராவதாக நடிகர் விஷால் தரப்பில், காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்