“விஜய், அஜித் அரசியலுக்கு வந்தால் சாதிப்பார்கள்” -நடிகர் எஸ்.ஜே.சூர்யா

நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள ‘மான்ஸ்டர்’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

Update: 2019-05-21 23:15 GMT
‘மான்ஸ்டர்’ படத்தின் வெற்றியை அனைவருடனும் பகிர்வதில் மகிழ்ச்சி. ஒரு நடிகனாக வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் 25 ஆண்டுகள் தொடர் முயற்சிக்குப் பிறகு நிறைவேறியிருக்கிறது. என் படத்திற்கு பலரும் குடும்பத்தோடு வருவதை பார்க்கும்போது இத்தனை நாள் இதை செய்ய தவறி விட்டோமே என்று குற்றஉணர்வு வருகிறது.

எலியால் தொடங்கிய இந்த பயணத்தின் மூலம் அடுத்தடுத்து நல்ல படங்களில் நடிப்பேன். நல்ல பட வாய்ப்புகள் என்னைத்தேடி வரும் என்றும் நம்புகிறேன். நான் இயக்கிய வாலி, குஷி, நியூ உள்ளிட்ட பல படங்களுக்கு வெற்றி கிடைத்தது. அதுபோல் மான்ஸ்டர் படமும் வெற்றி பெற்று இருக்கிறது.

ஒரு நடிகனாக உழைக்க விரும்புகிறேன். அமிதாப்பச்சனுடன் நடிக்கும் உயர்ந்த மனிதன் படத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும். நெஞ்சம் மறப்பதில்லை, இரவா காலம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளேன். விஜய், அஜித் படங்களை இயக்கி இருக்கிறேன். அவர்கள் எந்த முடிவெடுத்தாலும் அதைச் சரியாக செய்து வெற்றியடையக் கூடியவர்கள். அரசியலுக்கு வந்தாலும் வெற்றியடைவார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வெற்றியடைந்த பிறகே திருமணத்தைப் பற்றி யோசிப்பேன்.”

இவ்வாறு எஸ்.ஜே.சூர்யா கூறினார்.

மேலும் செய்திகள்