“இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்” - பட விழாவில் சூர்யா பேச்சு

இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என பட விழாவில் நடிகர் சூர்யா பேசினார்.

Update: 2019-05-29 23:15 GMT

சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே.’ படம் தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. இதையொட்டி ஐதராபாத்தில் நடந்த விழாவில் சூர்யா கலந்துகொண்டு பேசியதாவது:-

“நான் இயக்குனர் செல்வராகவனின் தீவிர ரசிகன். அவர் இயக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்ற 19 வருட கனவு என்.ஜி.கே. படத்தில் நிறைவேறி இருக்கிறது. இது அரசியல் படம். சாதாரண இளைஞன் அரசியலுக்கு வர விரும்புவதும், அதனால் என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதும் கதை.

பொதுவாக ஓட்டுப்போட ஆர்வம் காட்டும் இளைஞர்கள் அரசியலுக்கு வர தயங்குகின்றனர். படித்தவர்களே இப்படி ஒதுங்கினால் எப்படி மாற்றம் கொண்டு வரமுடியும். இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அதைத்தான் படத்தில் சொல்லி இருக்கிறோம். எனக்கு நடிக்கத்தான் தெரியும். கதை, கதாபாத்திரங்களை உருவாக்க தெரியாது.

செல்வராகவன் சிறந்த நடிகரும் கூட. அவர் சொல்லி கொடுத்தபடி நடித்து இருக்கிறேன். எனக்கு தெலுங்கில் அதிக ரசிகர்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் நடித்த கஜினி, சிங்கம் உள்ளிட்ட பல படங்கள் ஆந்திராவில் வெளியாகி நன்றாக ஓடி இருக்கின்றன. அந்த வரிசையில் என்.ஜி.கே. படமும் வருகிறது. நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவும் ஆசை உள்ளது.

சாய்பல்லவி, ரகுல் பிரீத் சிங் திறமையான நடிகைகள். அவர்கள் என்.ஜி.கே. படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.”இவ்வாறு சூர்யா பேசினார்.

மேலும் செய்திகள்