17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன்

17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மாதவனுடன், சிம்ரன் ஜோடி சேர்ந்துள்ளார்.

Update: 2019-06-16 23:15 GMT

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் தயாராகும் ‘ராக்கெட்ரி-நம்பி விளைவு’ என்ற படத்தில் மாதவன் நடித்து வருகிறார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. வெளிநாட்டுக்கு ரகசியங்களை விற்க முயன்றதாக நம்பி நாராயணன் மீது தேச விரோத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு 1994-ல் கைது செய்யப்பட்டார்.

பின்னர் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்து நம்பி நாராயணன் குற்றமற்றவர் என்று நிரூபித்தது. இதைத்தொடர்ந்து நம்பி நாராயணனை வழக்கில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு விடுவித்தது. அவருக்கு கேரள அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த சம்பவங்களை உள்ளடக்கி சஸ்பென்ஸ் திகில் படமாக ராக்கெட்ரி படத்தை எடுக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கதாநாயகியாக யார் நடிக்கிறார் என்பதை தெரிவிக்காமல் இருந்தனர். தற்போது சிம்ரன் நடிப்பதாக மாதவன் அறிவித்து அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

ஏற்கனவே இருவரும் மணிரத்னம் இயக்கத்தில் 2002-ல் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இணைந்து நடித்து இருந்தார்கள். 17 வருடங்களுக்கு பிறகு ராக்கெட்ரி படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.

மேலும் செய்திகள்