‘இன்று நேற்று நாளை’ 2-ம் பாகத்தில் விஷ்ணு விஷால்

தமிழில் 2-ம் பாகம் படங்கள் அதிகம் தயாராகின்றன. ஏற்கனவே எந்திரன், விஸ்வரூபம், சாமி, சண்டக்கோழி, நான் அவன் இல்லை உள்ளிட்ட சில படங்கள் 2-ம் பாகமாக வந்தன.

Update: 2019-07-03 23:00 GMT
சிங்கம், காஞ்சனா படங்களின் 3 பாகங்கள் வெளியானது. அடுத்து இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்களின் 2-ம் பாகங்கள் தயாராக உள்ளன.

இந்த நிலையில் ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் தயாராக இருக்கிறது. இந்த படம் 2015-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் ஆகியோர் நடித்து இருந்தனர். இந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதை தயாராகி உள்ளது.

முதல் பாகத்தை இயக்கிய ரவிக்குமார் இரண்டாம் பாகத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார். முதல் பாகத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய எஸ்.பி.கார்த்திக் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது.

தற்போது விஷ்ணு விஷால் நடிப்பது உறுதியாகி உள்ளது. கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரியா பவானி சங்கர் ‘மேயாதமான்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர் படங்களில் நடித்தார்.

மேலும் செய்திகள்