அஜித்குமார் நடிக்கும் 3 படங்களை தயாரிக்கிறேனா? போனிகபூர் விளக்கம்

அஜித்குமார் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படத்தின் தமிழ் பதிப்பாக தயாராகிறது. இதில் அஜித் ஜோடியாக வித்யாபாலன் வருகிறார்.

Update: 2019-07-12 00:17 GMT
இந்த படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய வினோத் டைரக்டு செய்கிறார். மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அஜித்குமார் கோர்ட்டில் வக்கீலாக வாதாடுவதுபோல் டிரெய்லரில் காட்சிகள் இருந்தன. ஆகஸ்டு மாதம் படத்தை திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த நிலையில், “அஜித்குமார் சிறந்த நடிகர். அவர் சம்மதித்தால் தொடர்ந்து அவருடன் பணியாற்ற தயாராக இருக்கிறேன்” என்று போனிகபூர் தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து அஜித் குமார் நடிக்கும் 3 படங்களை போனிகபூர் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் பரவின.

இதற்கு போனிகபூர் டுவிட்டரில் அளித்துள்ள விளக்கத்தில், “அஜித்குமாரை வைத்து 3 படங்களை தயாரிக்க நான் ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் பரவி வருகிறது. அதில் உண்மை இல்லை. நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு ஒரு அதிரடி படத்தை எடுக்க ஏற்பாடுகள் நடக்கிறது. அஜித்குமார் ஒரு இந்தி படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அது இன்னும் முடிவாகவில்லை” என்றார்.

மேலும் செய்திகள்