ரூ.37 லட்சம் மோசடி புகாரில் சோனாக்சி சின்ஹாவை விசாரிக்க சென்ற போலீசார்

இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான இவர் இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

Update: 2019-07-12 23:22 GMT
தமிழில் ‘லிங்கா’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தவர் சோனாக்சி சின்ஹா. இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான இவர் இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் டெல்லியில் ‘இந்தியா பேஷன் மற்றும் பியூட்டி’ விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள சோனாக்சி சின்ஹாவை அழைத்து இருந்தனர். இதற்காக அவருக்கு 4 தவணைகளாக ரூ.37 லட்சம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இறுதியாக அந்த நிகழ்ச்சிக்கு செல்ல சோனாக்சி சின்ஹா மறுத்துவிட்டார். பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

இதைத்தொடர்ந்து சோனாக்சி சின்ஹா மீது உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சோனாக்சி சின்ஹா உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தன்னை கைது செய்ய தடைவிதிக்குமாறு அலகாபாத் ஐகோர்ட்டில் சோனாக்சி மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சோனாக்சி சின்ஹாவை கைது செய்ய இடைக்கால தடைவிதித்தனர். போலீசார் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இந்த நிலையில் போலீசார் சோனாக்சி சின்ஹாவிடம் விசாரணை நடத்த மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்றனர். அப்போது சோனாக்சி வீட்டில் இல்லை. சில மணி நேரம் அங்கு காத்து இருந்து விட்டு திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்