குழந்தை கடத்தல் சர்ச்சையில் சிக்கிய நடிகை வனிதா பிக்பாஸில் இருந்து வெளியேற்றம்

பிக்பாஸ் அரங்கில் இருந்து நடிகை வனிதா வெளியேற்றப்பட்டுள்ளார்.

Update: 2019-07-15 22:00 GMT
பிக்பாஸ் 3-வது சீசன் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். டைரக்டர் சேரன், நடிகர்கள் சரவணன், கவின், தர்ஷன், நடிகைகள் வனிதா, ஷெரின், மீரா மிதுன், சாக்‌ஷி அகர்வால், மதுமிதா, லொஸ்லியா உள்ளிட்டோர் போட்டியாளர்களாக உள்ளனர். வனிதா ஏற்கனவே பெற்றோர்களுடன் சொத்து பிரச்சினை தொடர்பாக மோதி பேசப்பட்டவர்.

நடிகர் ஆகாசை மணந்து விவாகரத்து செய்தார். தொழில் அதிபர் ஆனந்தராஜை 2-வது திருமணம் செய்து அவரையும் விவாகரத்து செய்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் தனது குழந்தையை கடத்திவிட்டதாக வனிதா மீது ஆனந்தராஜ் போலீசில் புகார் அளித்ததும், தெலுங்கானா போலீசார் பிக்பாஸ் அரங்குக்குள் சென்று வனிதாவிடம் விசாரணை நடத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிக்பாஸ் அரங்கில் சக போட்டியாளர்களுக்கும், வனிதாவுக்கும் மோதல்கள் நடந்தன. தர்ஷனை பார்த்து நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் என்று பேசி வருத்தப்பட வைத்தார். இந்த நிலையில் பிக்பாஸ் அரங்கில் இருந்து நடிகை வனிதாவை கமல்ஹாசன் வெளியேற்றி உள்ளார்.

இது வனிதாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெளியேறிய பின்னர் அவர் பேசும்போது, “தனியாக வாழும் பெண்கள் தங்கள் வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். மன வலிமையுடன் இருக்க வேண்டும். எவ்வளவோ கஷ்டங்கள் வரலாம். அதற்காக தற்கொலை செய்துகொள்ள கூடாது” என்று கண்கலங்கியபடி கூறினார்.

மேலும் செய்திகள்