சூர்யா துணிச்சலை வணங்குகிறேன் - நடிகர் சத்யராஜ்

நடிகர் சூர்யா தெரிவித்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு எதிரான கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளன.

Update: 2019-07-24 23:30 GMT
பா.ஜனதா, அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் சூர்யாவை கண்டித்தனர். சூர்யாவின் கருத்தை ஆதரிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். அகரம் பவுண்டேசன் மூலம் மாணவர்களுக்கு உதவிகள் செய்து வரும் சூர்யா கல்வி கொள்கை பற்றி தெளிவாக உணர்ந்து பேசி இருக்கிறார் என்றும் எதிர்காலத்தில் அவரது தொண்டு மக்களுக்கு தேவை என்றும் கூறினார்.

புதிய கல்வி கொள்கை பற்றி தெரிவித்த கருத்தில் உறுதியாக இருப்பதாக சூர்யாவும் தெளிவுபடுத்தி உள்ளார். நான் நிஜ வாழ்க்கையில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் என்றும் கூறினார். இந்த நிலையில் சூர்யாவை பாராட்டி நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:-

“சில கஷ்டங்கள் அதற்குள் பல இழப்புகள் உள்ளன. பல சங்கடங்களை பல எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிவரும். அதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். நீ, சமூக நீதிக்காக, கல்விக்காக குரல் கொடுத்ததை ரொம்ப பெருமையாக நினைக்கிறேன். அதை கூட வெறும் நுனிப்புல் மேய்ந்து மேலோட்டமாக சொல்லாமல் ஆழமாக இறங்கி அலசி ஆராய்ந்து என்ன சொல்ல வேண்டுமோ அதை சொல்லியிருக்கிறாய். வயதில் பெரியவன் என்பதால் வாழ்த்துகிறேன். ஆனால் உன் துணிச்சலை வணங்குகிறேன்.”

இவ்வாறு சத்யராஜ் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்