அடுத்த மாதம் படப்பிடிப்பு அஜித்குமாரின் புதிய படம்

அஜித்குமார் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்துள்ளார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கி பிரபலமான வினோத் டைரக்டு செய்துள்ளார்.

Update: 2019-07-30 22:11 GMT
அஜித்குமார் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்துள்ளார். இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த ‘பிங்க்’ படத்தின் தமிழ் பதிப்பாக தயாராகி உள்ளது. இதில் வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், டெல்லி கணேஷ் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கி பிரபலமான வினோத் டைரக்டு செய்துள்ளார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார். இதில் அஜித்குமார் வக்கீல் வேடத்தில் வருகிறார். சில பெண்கள் பிரச்சினையில் சிக்குகின்றனர். அவர்களுக்காக அஜித்குமார் கோர்ட்டில் வாதாடி எப்படி உதவுகிறார் என்பது கதை. படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. பாடல்களையும் வெளியிட்டு உள்ளனர்.

நேர்கொண்ட பார்வை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 8-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்துக்கு பிறகு அஜித்குமார் நடிக்கும் புதிய படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது. தற்போது அவர் நடிக்கும் புதிய படம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தையும் வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார்.

இதுகுறித்து போனிகபூர் டுவிட்டர் பக்கத்தில், “நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. அஜித்குமார், எச்.வினோத் கூட்டணியில் புதிய படம் தயாராகிறது. இந்த படம் ஆகஸ்டு மாதம் இறுதியில் பூஜையுடன் தொடங்குகிறது” என்று கூறியுள்ளார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பார் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்