“பட அதிபருக்கு காதல் கடிதம் கொடுத்தேனா?” - நடிகை ஷகிலா விளக்கம்
பட அதிபருக்கு காதல் கடிதம் கொடுத்தது குறித்து வெளியான தகவலுக்கு நடிகை ஷகிலா விளக்கம் அளித்துள்ளார்.
மலையாள பட உலகை 1990 முதல் 2000 வரை கவர்ச்சியால் கலக்கியவர் ஷகிலா. இவரது படங்களை பார்க்க தியேட்டர்களில் ரசிகர்கள் அலைமோதினர். வசூலிலும் மோகன்லால், மம்முட்டி படங்களை பின்னுக்கு தள்ளின. ஷகிலா படங்களை தயாரித்தவர்கள் கோடீஸ்வரர்கள் ஆனார்கள். பின்னர் ஷகிலா படங்களை பார்த்து இளைஞர்கள் கெடுகிறார்கள் என்று எதிர்ப்பு கிளப்பி அவரை கேரளாவில் இருந்து வெளியேற்றினார்கள். ஷகிலாவின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தில் ஷகிலாவாக இந்தி நடிகை ரிச்சா சத்தா நடிக்கிறார். ஷகிலாவுக்கு தொல்லை கொடுத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை அப்படியே படத்தில் காட்சி படுத்துவதால் சம்பந்தப்பட்டவர்கள் பயத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான மணியம்பிள்ளை ராஜுவுக்கு ஷகிலா காதல் கடிதம் கொடுத்ததாகவும் கடைசிவரை அந்த கடிதத்துக்கு அவர் பதில் சொல்லவில்லை என்றும் சமீபத்தில் தகவல் வெளியானது.
இதற்கு ஷகிலா தற்போது பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
“சோட்டா மும்பை மலையாள படத்தில் நடித்தபோது மணியம்பிள்ளைக்கு நான் காதல் கடிதம் கொடுத்ததாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அப்போது எனது தாயார் உடல் நலம் குன்றி இருந்தார். அதற்கு மணியம்பிள்ளை பண உதவி செய்தார். அவருக்கு நான் காதல் கடிதம் கொடுக்கவில்லை. அப்போது போஸ் என்ற இளைஞரை நான் காதலித்தேன். அப்படி இருக்க மணியம்பிள்ளைக்கு எப்படி காதல் கடிதம் கொடுத்து இருக்க முடியும்?” இவ்வாறு ஷகிலா கூறியுள்ளார்.