காஞ்சனா, கத்தி, வீரம் இந்தியில் தயாராகும் 3 தமிழ் படங்கள்

ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக வந்த அக்‌ஷய்குமார் இந்தியில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவருக்கு தமிழ் படங்களை இந்தியில் ரீமேக் செய்து நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2019-08-03 00:30 GMT
ஏற்கனவே தமிழில் வசூல் குவித்த காஞ்சனா படத்தின் இந்தி பதிப்பில் நடித்து வருகிறார். இந்த படத்தை லாரன்ஸ் இயக்குகிறார்.

ஆரம்பத்தில் தயாரிப்பாளருடன் மோதல் ஏற்பட்டு படத்தில் இருந்து விலகிய லாரன்சை அக்‌ஷய்குமார் சமரசப்படுத்தி மீண்டும் படத்தை இயக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அடுத்து அஜித்குமார்-தமன்னா ஜோடியாக நடித்து 2014-ல் திரைக்கு வந்து வசூல் குவித்த வீரம் படத்தையும் இந்தியில் ரீமேக் செய்து அஜித் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில் விஜய்யின் கத்தி படத்தின் இந்தி ரீமேக்கிலும் அக்‌ஷய்குமார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கத்தி படம் 2014-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. இதில் விஜய் 2 வேடங்களில் நடித்து இருந்தார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார். கத்தி படத்தை இந்தியில் ரீமேக் செய்ய கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து தற்போது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

இதில் அக்‌ஷய்குமார் 2 வேடங்களில் நடிக்கிறார், சமந்தா வேடத்தில் முன்னணி இந்தி நடிகை நடிப்பார் என்று தெரிகிறது. படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர்.

மேலும் செய்திகள்