காதலை முறித்ததால் ஆத்திரம் நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகர்

போஜ்புரி நடிகை அக்‌ஷரா சிங், நடிகர் பவன் சிங் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார்.

Update: 2019-08-05 22:00 GMT
போஜ்புரி படங்களில் நடித்து வருபவர் பவன் சிங். பாடகராகவும் இருக்கிறார். இவருக்கும் போஜ்புரி நடிகை அக்‌ஷரா சிங்குக்கும் காதல் இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் பவன் சிங்குக்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது. இதைத்தொடர்ந்து அவருடனான தொடர்பை அக்‌ஷரா சிங் முறித்துக்கொண்டார்.

ஆனால் பவன்சிங் அக்‌ஷராவுடன் தொடர்பை நீடிக்க விரும்பினார். அதற்கு அவர் உடன்படாததால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. அக்‌ஷரா சிங்கின் அந்தரங்க படங்களை சமூக வலைத்தளத்தில் பவன் சிங் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அக்‌ஷரா சிங் போலீசில் புகார் அளித்தார்.

அதில், “பவன் சிங் நட்பை தொடரும்படி மிரட்டினார். நான் சம்மதிக்காததால் எனது ஆபாச புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த பிரச்சினை குறித்து அக்‌ஷரா சிங் அளித்துள்ள பேட்டியில், “பவன் சிங்கும், நானும் நட்பாக பழகினோம். அவருக்கு திருமணம் முடிந்ததும் நட்பை முறித்தேன். என்னுடன் தொடர்பில் இல்லை என்றால் உன்னை படங்களில் நடிக்க விடமாட்டேன் என்றார். கொலை மிரட்டலும் விடுத்தார். இப்போது எனது அந்தரங்க புகைப்படங்களையும், வீடியோவையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். அவருக்கு எதிராக போராடுவேன்” என்றார்.

மேலும் செய்திகள்