தமிழுக்கு வரும் மேலும் 2 இந்தி படங்கள்

போனிகபூர் மேலும் 2 இந்தி படங்களை தமிழில் ‘ரீமேக்’ செய்ய திட்டமிட்டு உள்ளார்.

Update: 2019-08-09 22:15 GMT
அமிதாப்பச்சன், டாப்சி நடித்து இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படம் தமிழில் அஜித்குமார்-வித்யாபாலன் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் தயாராகி வெளிவந்துள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கிய இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் போனிகபூர் மேலும் 2 இந்தி படங்களை தமிழில் ‘ரீமேக்’ செய்ய திட்டமிட்டு உள்ளார். இதற்காக இந்தியில் வெற்றி பெற்ற ‘ஆர்டிகிள் 15,’ ‘பதாய் ஹோ’ ஆகிய படங்களின் தமிழ், தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கி வைத்துள்ளார். ‘ஆர்டிகிள் 15’ படத்தில் ஆயுஷ்மன் குர்ரானா, இஷா தல்வார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அனுபவ் சிங்கா இயக்கி உள்ளார். இந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்து பெரிய வரவேற்பை பெற்றது. பதாய் ஹோ படம் கடந்த வருடம் திரைக்கு வந்தது. இந்த படத்திலும் ஆயுஷ்மன் குர்ரானா நடித்து இருந்தார். இந்த 2 படங்களை தமிழில் தயாரிக்கும் வேலைகளை போனிகபூர் தொடங்கி இருக்கிறார். நடிகர், நடிகைகள் தேர்வு நடப்பதாக கூறப்படுகிறது.

ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் பதிப்பில் நடிக்க தனுஷ் ஏற்கனவே விருப்பம் தெரிவித்து இருந்தார். எனவே அவர் தேர்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது. இத்துடன் அஜித்-வினோத் கூட்டணியில் இன்னொரு புதிய படத்தையும் போனிகபூர் தயாரிக்க உள்ளார்.

மேலும் செய்திகள்