போலீசார் விசாரிக்க வேண்டும் நடிகை மதுமிதாவுக்கு ஆதரவாக எஸ்.வி.சேகர்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், நடிகை மதுமிதா பிக்பாஸ் அரங்கில் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-08-20 00:46 GMT
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி சர்ச்சையில் சிக்கி வருகிறது. நடிகை வனிதாவை குழந்தை கடத்தல் வழக்கில் போலீசார் விசாரித்தனர். அதன்பிறகு நடிகை மீராமிதுனும் போலீஸ் நடவடிக்கையில் சிக்கினார். இருவரும் வெளியேற்றப்பட்டனர். இப்போது நடிகை மதுமிதா பிக்பாஸ் அரங்கில் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சக போட்டியாளர்கள் கொடுத்த தொல்லையால் மனஅழுத்தம் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றதாக மதுமிதா கூறியுள்ளார். அவரது செயலை கமல்ஹாசன் கண்டித்தார். “உங்கள் கையில் நீங்கள் ஏற்படுத்திருக்கும் காயம் மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணம் அல்ல. இது கெட்டிக்காரதனமா? முட்டாள்தனமா? என்று உங்களிடம் வாதாட வரவில்லை. தன்னை துன்புறுத்திக்கொள்ளும் எந்த செயலையும் யாரும் செய்யக்கூடாது’ என்றார்.

மதுமிதாவையும் வெளியேற்றினர். இந்த நிலையில் மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் யார்? என்று போலீசார் விசாரிக்க வேண்டும் என்று நடிகர் எஸ்.வி.சேகர் வற்புறுத்தி உள்ளார். அவர் கூறும்போது, “மதுமிதா தற்கொலைக்கு முயற்சி செய்தது தவறு என்று வெளியேற்றி உள்ளனர். அவரை தற்கொலைக்கு தூண்டியவர்கள் யார் என்று கண்டுபிடித்து வெளியே அனுப்ப முடியாதா? இது விளையாட்டுதான் என்றாலும் போலீஸ் விசாரணை தேவை” என்று கூறியுள்ளார். இதனால் போலீஸ் வழக்குப்பதிவு செய்து பிக்பாஸ் நடிகர், நடிகைகளிடம் விசாரணை நடத்துமா? என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்