சினிமாவில் நடக்கும் கதை திருட்டுகள் டைரக்டர் பாக்யராஜ் வருத்தம்

ஆரி-ஷாஷ்வி பாலா ஜோடியாக நடித்துள்ள படம் ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ முகமது அபுபக்கர், பகவதி பெருமாள், ஷரத்ராஜ், பழனி, பிஜேஜ் நம்பியார், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

Update: 2019-08-23 03:30 GMT
‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ இந்த படத்தை கவிராஜ் இயக்கி உள்ளார். ராவுத்தர் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் டைரக்டர் பாக்யராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:-

“ஏலியனை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளனர் என்று கருதுகிறேன். எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான் என்று கடவுளை நினைத்துக்கொண்டு இருக்க முடியாது. உலகத்தை கடவுள் படைத்தார் என்றால் கெட்டவர்களை ஏன் உருவாக்கினார் என்ற கேள்விகள் எழுகின்றன.

பேய் அடிக்கும் என்று சொல்வதிலும் நம்பிக்கை இல்லை. சினிமாவில் அதிகமான கதை திருட்டுகள் நடப்பதாக புகார்கள் வருகின்றன. பொதுவான விஷயங்களில் ஒரேமாதிரி படங்கள் எடுக்கலாம், சந்தன கடத்தல் வீரப்பன் கதையை யாரும் எடுக்கலாம். ஆனால் ஒரு கதையை அப்படியே காப்பி அடித்து எடுப்பது தவறு. குளோனிங் பற்றி நான் ஒரு கதை தயார் செய்து இருந்தேன். ஒரு வருடம் கழித்து அதே மாதிரி ஒரு படம் வந்ததால் நான் எழுதிய கதையை படமாக்கவில்லை.” இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.

விழாவில் டைரக்டர்கள் ஆர்.வி.உதயகுமார், அமீர், நடிகர் ஆரி, இசையமைப்பாளர் கார்த்திக் ஆச்சாரியா, ஒளிப்பதிவாளர் லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்