ஐந்து நட்சத்திர ஓட்டலில் வழங்கிய உணவில் புழுக்கள் இருந்ததாக நடிகை நிலா புகார்

ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்ததாக நடிகை நிலா புகார் கூறியுள்ளார்.

Update: 2019-08-27 22:15 GMT
தமிழில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக ‘அன்பே ஆருயிரே’ படத்தில் நிலா என்ற பெயரில் அறிமுகமானவர் மீரா சோப்ரா. பிரசாந்துடன் ஜாம்பவான், சிபிராஜுடன் லீ, அர்ஜுன் ஜோடியாக மருதமலை, பரத்துடன் கில்லாடி மற்றும் காளை, ஜெகன் மோகினி, இசை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர்.

மீரா சோப்ரா ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்ததாக புகார் கூறி ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் உணவில் புழுக்கள் நெளியும் காட்சிகள் உள்ளன. வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

“நான் ஆமதாபாத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கி இருக்கிறேன். அறையில் இருந்து உணவு ஆர்டர் செய்தேன். அதில் புழுக்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியானேன். நீங்களே நன்றாக பாருங்கள். இதுபோன்ற ஓட்டல்களில் அதிக வாடகை கொடுத்து தங்கி இருக்கிறோம். ஆனால் அவர்களோ புழுக்கள் உள்ள உணவை தருகிறார்கள்.

கடந்த ஒரு வாரமாக இந்த ஓட்டலில்தான் தங்கி இருக்கிறேன். இங்கு தங்கிய பிறகு எனக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதற்கான காரணத்தை இப்போதுதான் கண்டு பிடித்து இருக்கிறேன். இதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தவே சமூக வலைத்தளத்தில் வெளியிடுகிறேன்.”

இவ்வாறு கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்