வேறு கதாநாயகர்களுடன் இணைந்து நடிக்க தயார் - நடிகர் ஆர்யா

வேறு கதாநாயகர்களுடன் இணைந்து நடிக்க தயார் என நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.

Update: 2019-09-02 22:45 GMT

ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் ஆகியோர் நடித்துள்ள புதிய படம் மகாமுனி. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். சாந்தகுமார் இயக்கி உள்ளார். படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ஆர்யா கூறியதாவது:-

“மகாமுனி படத்தில் கார் டிரைவர் மற்றும் கொலையாளி என்று இரு வேடங்களில் நடித்துள்ளேன். எனக்கு சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் உண்டு. சைக்கிள் பந்தயம் மீதான ஆர்வம்தான் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தது. சைக்கிள் பந்தயங்களில் ஈடுபடுபவர்கள் உடல் ரீதியாக மட்டுமின்றி மன ரீதியாகவும் வலுவானவர்களாக இருப்பார்கள்.

மகாமுனி படத்துக்கு அதுமாதிரி ஒரு நடிகர் தேவை என்பதால் இயக்குனர் என்னை தேர்வு செய்தார். அழுத்தமான கதையம்சத்தில் இந்த படம் தயாராகி உள்ளது. இதில் ஒரு சிறுவனுக்கு தந்தையாக நடித்து இருக்கிறேன். எனது திருமணத்துக்கு பிறகு இந்த படம் திரைக்கு வருகிறது. திருமணமான பிறகு நான் மாறவில்லை. சக நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்து உள்ளனர்.

அடுத்த மாதம் நான் நடித்துள்ள மகாமுனி, காப்பான் ஆகிய 2 படங்கள் திரைக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. காப்பான் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளேன். தொடர்ந்து இரண்டு, மூன்று கதாநாயகர்கள் படங்களில் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன்.” இவ்வாறு ஆர்யா கூறினார்.

மேலும் செய்திகள்