முத்தமிட வற்புறுத்தினார் இயக்குனர் மீது நடிகை ஜரீன்கான் புகார்

நடிகை ஜரீன்கான் இயக்குனர் மீது புகார் கூறியுள்ளார்.

Update: 2019-09-18 22:00 GMT
நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது ‘மீ டூ’வில் தொடர்ந்து பாலியல் புகார்கள் சொல்லப்பட்டு வருகின்றன. பட வாய்ப்புக்காக  படுக்கைக்கு அழைப்பதாக நடிகைகள் குற்றம் சாட்டி உள்ளனர். பல வருடங்களுக்கு முன்பு நடந்த பாலியல் தொல்லைகளையும் அம்பலப்படுத்தி வருகிறார்கள். இதனால் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட பட உலகினர் எப்போது யார் ‘மீ டூ’வில் சிக்குவாரோ? என்ற கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில் புதிதாக நடிகை ஜரீன்கான் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். 2010-ல் சல்மான்கானின் ‘வீர்’ என்ற இந்தி படத்தில் அறிமுகமான இவர் தமிழில் நகுலுடன் ‘நான் ராஜாவாக போகிறேன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஜரீன்கான் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

“பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக பரவலாக பேசி வருகின்றனர். எனக்கும் அதுபோன்ற அனுபவம் ஏற்பட்டது. ஒரு படத்தில் முத்த காட்சியில் நடிக்க வேண்டி இருந்தது. அந்த படத்தின் இயக்குனர் என்னை அழைத்து முத்த காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று ஒத்திகை பார்க்க வேண்டும் என்றார்.

அவரை முத்தமிட்டு ஒத்திகை எடுத்துக்கொள்ளும்படி வற்புறுத்தினார். அப்போதுதான் படத்தில் நடிக்கும்போது கூச்சம் இருக்காது என்றார். அதை கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இயக்குனரை முத்தமிட நான் சம்மதிக்கவில்லை.”

இவ்வாறு ஜரீன் கான் கூறினார்.

மேலும் செய்திகள்