600 நடிகர் - நடிகைகளுக்கு பென்சன் வழங்குவது நிறுத்தம் நடிகர் சங்க ஓட்டு எண்ணிக்கை 3 மாதமாக முடக்கம்

நாசர், விஷாலின் பாண்டவர் அணியும் பாக்யராஜ், ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதிய தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23-ந்தேதி நடந்தது.

Update: 2019-09-29 23:15 GMT
கோர்ட்டு உத்தரவினால் 3 மாதங்களாக ஓட்டுகளை எண்ணாமல் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் நடிகர் சங்க கட்டிட பணிகள் முடங்கி உள்ளன. 4-வது மாடியில் மேற்கூரை அமைக்கும் பணியும் உள்பூச்சு மற்றும் உள் அலங்கார வேலைகளும் பாக்கி உள்ளன. இவற்றுக்கு மேலும் ரூ.15 கோடி வரை தேவைப்படும் என்கின்றனர். புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்ததும் நட்சத்திர கலைவிழா நடத்தி கட்டிட பணிக்கு நிதியை திரட்டுவோம் என்று அறிவித்து இருந்தனர்.

அது நடக்கவில்லை. ஏற்கனவே வங்கி இருப்பில் இருந்த தொகை செலவாகி விட்டதால் கட்டிட பணியை தொடர பணம் இல்லை என்கிறார்கள். மூத்த நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்கள் சுமார் 600 பேருக்கு மாதம் ரூ.9 லட்சம் பென்சன் வழங்கப்பட்டு வந்தது. பணம் இல்லாததால் கடந்த மாதம் முதல் பென்சன் வழங்குவதை நிறுத்தி விட்டனர்.

இதுபோல் மருத்துவ சிகிச்சை மற்றும் கல்வி உதவி கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு கொடுக்கவும் பணம் இல்லை என்கின்றனர். வருகிற 3-ந்தேதி நடிகர் சங்க தேர்தல் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது ஓட்டுக்களை எண்ணுவது குறித்து முடிவு தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்