‘‘பெண்களை சுதந்திரமாக வளருங்கள்’’ –பிரியங்கா சோப்ரா

பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து வளர்த்தால் உயர்ந்த நிலைக்கு வருவார்கள் என்று நடிகை பிரியங்கா சோப்ரா கூறினார்.

Update: 2019-10-10 22:30 GMT
விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமாகி இந்தியில் முன்னணி நடிகையாக உயர்ந்த பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது ‘த ஸ்கை இஸ் பிங்க்’ என்ற இந்தி படத்திலும், ஹாலிவுட் படமொன்றிலும் நடித்து வருகிறார். பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டி வருமாறு:–

‘‘பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்தால் பெரிய அளவில் சாதிப்பார்கள். இந்தியில் திறமையான நடிகைகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ஹாலிவுட் படங்களிலும் முத்திரை பதிப்பார்கள். நான் அதற்கு உதாரணமாக இருக்கிறேன். எனக்கு சிறுவயதிலேயே பெற்றோர் சுதந்திரம் கொடுத்து வளர்த்தனர்.

எனக்கு பிடித்த பாடத்தை படித்தேன். சினிமாவில் நடிக்கவும் தடை சொல்லவில்லை. அதனால்தான் உயர முடிந்தது. பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து வளர்த்தால் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். எல்லோரும் என்னை மாதிரி வர முடியாமல் போகலாம். ஆனால் ஒவ்வொருவரும் அவரவர் துறையில் சாதிக்க முடியும்.  அதற்கு பெற்றோர்களும், திருமணமான பெண்களுக்கு கணவன்மார்களும் உறுதுணையாக இருந்து ஊக்குவிக்க வேண்டும். பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்தால் அவர்கள் வாழ்க்கை பாழாகி விடும் என்ற காலம் மலையேறி விட்டது. சுதந்திரம் கொடுத்தால் எந்த உயரத்துக்கும் அவர்களால் போகமுடியும் என்பதை உலகம் பார்த்துக்கொண்டு இருக்கிறது.’’ 

இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்.

மேலும் செய்திகள்