மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி

பிரபல இயக்குனர் தங்கர் பச்சான் தனது மகன் விஜித் பச்சானை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ என்ற படத்தை இயக்கி உள்ளார். ஜார்ஜ் டயஸ் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

Update: 2019-10-17 23:15 GMT
மகனை கதாநாயகனாக்கியது குறித்து தங்கர் பச்சான் அளித்த பேட்டி வருமாறு:-

“எனது மகன் கதாநாயகனாக நடிப்பது தானாகவே அமைந்தது. எனது முதல் படம் மாதிரி இதை இயக்கி இருக்கிறேன். எனது முந்தைய படங்களில் உள்ள பாணி இந்த படத்தில் இருக்காது. எனது படம் மாதிரியே இருக்காது. எனது படங்களில் போலீஸ் வந்தது இல்லை. ஆனால் இந்த படத்தில் போலீஸ், கொலை, போதைபொருள், கடத்தல், துரத்தல், டப்பாங்குத்து எல்லாம் இருக்கும்.

இந்த காலகட்டத்தில் கதை இல்லாத படங்களே அதிகம் வருகின்றன. குடும்ப உறவுகள் இல்லை. மக்கள் ரசனையும் மாறுகிறது. எனவே நானும் வேறுமாதிரி படம் எடுக்க வந்து விட்டேன். அதற்காகவே டக்கு முக்கு டிக்கு தாளம் என்று பெயர் வைத்துள்ளேன். இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள எனது மகனுடன் மிள்ளனா நாகராஜ், அஷ்வினி சந்திரசேகர், முனிஷ் காந்த் ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்டன்ட் செல்வா, மன்சூர் அலிகான், யோகிராமநாதன் ஆகியோர் வில்லன்களாக வருகிறார்கள். முழுக்க சென்னையில் நடக்கும் கதை. விஜித் கீழ் நிலையில் இருக்கிற குப்பத்து ஏழை இளைஞனாக வருகிறார். அவருக்கும் கோடி கோடியாய் சொத்து வைத்து வாழ பிடிக்காத முனிஷ்காந்துக்கும் பணம் எதை கற்றுத்தருகிறது என்பது கதை.

ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை படம் விறுவிறுப்பாக இருக்கும்.”

இவ்வாறு தங்கர் பச்சான் கூறினார்.

மேலும் செய்திகள்