நடிகை ஆண்ட்ரியாவுக்கு மிரட்டல்

நடிகை ஆண்ட்ரியாவுக்கு, அவரது முன்னாள் காதலர் மிரட்டல் விடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-10-21 23:51 GMT

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஆண்ட்ரியா. ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, உத்தம வில்லன், துப்பறிவாளன், வடசென்னை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். சமீபகாலமாக படங்களில் அவர் நடிக்கவில்லை.

இந்த நிலையில் பெங்களூருவில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ஆண்ட்ரியா பேசும்போது ஒருவருடன் தனக்கு தொடர்பு இருந்ததாகவும் அவர் மோசம் செய்து விட்டதாகவும் பரபரப்பு தகவல்களை வெளியிட்டார்.

ஆண்ட்ரியா பேசும்போது, நான் திருமணமான ஒருவருடன் தகாத தொடர்பில் இருந்தேன். அவர் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் என்னை துன்புறுத்தினார். இதன் காரணமாக மன அழுத்தத்துக்கு உள்ளானேன். இதனால் சினிமாவில் இருந்து கொஞ்சம் ஓய்வு எடுத்தேன். அதில் இருந்து மீள ஆயுர்வேத சிகிச்சையும் எடுத்துக்கொண்டேன்.

இந்த தகவல்களை நான் எழுதி உள்ள புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளேன். அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல்களும் புத்தகத்தில் இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த புத்தகம் ஓரிரு நாளில் விற்பனைக்கு வருகிறது. ஆண்ட்ரியாவை ஏமாற்றியவர் நடிகரா? அரசியல்வாதியா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆண்ட்ரியாவுக்கு போனில் மிரட்டல்கள் வருவதாக கூறப்படுகிறது. திருமணமான முன்னாள் காதலர் இந்த மிரட்டலை விடுப்பதாகவும் புத்தகத்தை வெளியிட கூடாது என்று அவர் எதிர்ப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

மேலும் செய்திகள்