படப்பிடிப்பில் விஜய்சேதுபதி உதவி

படப்பிடிப்புக்காக உருவாக்கப்பட்ட கட்டிடத்தை நடிகர் விஜய்சேதுபதி கிராம மக்களிடம் வழங்கினார்.

Update: 2019-10-22 00:03 GMT

விஜய்சேதுபதியும், சுருதிஹாசனும் லாபம் என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். இந்த படத்தை ஜனநாதன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. சென்னை குன்றத்தூர் அருகே உள்ள கிராமத்தில் படப்பிடிப்புக்காக விவசாயிகள் சங்க கட்டிடம் ஒன்றை படக்குழுவினர் கட்டினர்.

அதை அரங்காக அமைக்காமல் நிஜமான கட்டிடமாகவே கட்டி படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். படப்பிடிப்பு முடிந்ததும் அந்த கட்டிடத்தை ஊர்மக்களுக்கே வழங்கும்படி விஜய் சேதுபதி கூறியுள்ளார். இதையடுத்து கட்டிடம் கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக விஜய்சேதுபதியை பாராட்டினர். இந்த படம் குறித்து ஜனநாதன் கூறியதாவது:-

“படம் யாருக்கு லாபம் என்பதையும் எது லாபம் என்பதையும் பேசும். இந்தியாவில் பெரிய பொருளாதாரமே விவசாய உற்பத்திதான். ஆனால் இப்போது விவசாயத்தில் நலிவு ஏற்பட்டு உள்ளது. விவசாயிகள் தற்கொலை என்ற செய்திகள் வருகின்றன. இதற்கெல்லாம் காரணம் யார் என்பதை படத்தில் சொல்லி இருக்கிறேன்.

இன்று விவசாயிகளுக்கு இருக்கும் பிரச்சினை சர்வதேச பிரச்சினை. அதை படம் விரிவாக பேசும். இதில் விஜய்சேதுபதி, சுருதிஹாசன் சிறப்பாக நடித்துள்ளனர். தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு வில்லனாக வருகிறார். கலையரசன், பிரித்வி, டேனி உள்ளிட்ட இன்றைய இளம் நடிகர்களும் படத்தில் உள்ளனர். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.” இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்