மூக்கில் ரத்தம் கொட்டியது நடிகை நூரின் மீது தாக்குதல்

விழாவுக்கு தாமதமாக வந்ததால் ரசிகர்கள் நடிகை நூரினை தாக்கியதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது.

Update: 2019-10-31 22:15 GMT
‘ஒரு அடார் லவ்’ படத்தில் கண்சிமிட்டி பிரபலமான பிரியா வாரியருடன் இணைந்து இரண்டாவது கதாநாயகியாக நடித்து இருந்தவர் நூரின் ஷெரிப். அந்த படத்துக்கு முதலில் நூரினைத்தான் கதாநாயகியாக தேர்வு செய்து இருந்ததாகவும் ஆனால் பிரியா வாரியரின் கண்சிமிட்டல் வைரலான பிறகு அவரை முதன்மையான கதாபாத்திரமாக்கி கதையை மாற்றிவிட்டதாகவும் இயக்குனர் தெரிவித்தார்.

பிரியா வாரியருக்காக தன்னை ஓரம் கட்டியதாக நூரின் ஷெரிப்பும் வருத்தப்பட்டார். ஆனாலும் நூரின் ஷெரிப்புக்கு மலையாளத்தில் ரசிகர்கள் உருவாகி உள்ளன. அவருக்கு பட வாய்ப்புகளும் குவிகின்றன. கடை திறப்பு விழாக்களுக்கும் பணம் கொடுத்து அழைக்கிறார்கள். கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் ஒரு சூப்பர் மார்க்கெட் திறப்பு விழாவுக்கு நூரின் ஷெரிப்பை அழைத்து இருந்தனர்.

மாலை 4 மணிக்கு விழாவில் கலந்து கொள்வார் என்று விளம்பரப்படுத்தினர். அவரை காண ஏராளமான ரசிகர்கள் சூப்பர் மார்க்கெட் முன்னால் திரண்டு நின்றனர். ஆனால் தாமதமாக மாலை 6 மணிக்கு அவர் வந்துள்ளார். காரில் இருந்து இறங்கியதும் நூரினை ரசிகர்கள் சூழ்ந்தனர். கைகுலுக்கவும் முண்டியடித்தனர். அப்போது ஒரு ரசிகர் நூரின் மூக்கில் குத்தினார்.

இதனால் அவருக்கு மூக்கில் ரத்தம் கொட்டியது. வலியால் துடித்தார். விழாவுக்கு தாமதமாக வந்ததால் ரசிகர்கள் தாக்கியதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது. ரசிகர் கை தவறுதலாக மூக்கில் இடித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்