மோகன்லால் படக்குழுவினரிடம் நடிகை மஞ்சுவாரியர் புகார் மீது விசாரணை
மஞ்சுவாரியர் புகாரின் பேரில் இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
மலையாள நடிகையான மஞ்சு வாரியர், நடிகர் திலீப்பை விவாகரத்து செய்த பிறகு மீண்டும் நடித்து வருகிறார். அசுரன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து தமிழ் பட உலகிலும் அறிமுகமாகி உள்ளார். ஓடியன் என்ற மலையாள படத்தை ஸ்ரீகுமார் மேனன் 2018-ல் இயக்கினார். இதில் மோகன்லால், மஞ்சு வாரியர், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்து இருந்தனர்.
ஸ்ரீகுமார் மேனன் தனக்கு மிரட்டல் விடுப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் போலியான தகவல்களை பரப்புவதாகவும் போலீசில் மஞ்சுவாரியர் புகார் அளித்தார். அவரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறேன் என்றும் குறிப்பிட்டு இருந்தார். மஞ்சுவாரியர் புகாரின் பேரில் இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
ஓடியன் படப்பிடிப்பில் கேக் வெட்டும்போது அனைவரது முன்னிலையிலும் ஸ்ரீகுமார் மேனன் தன்னை அவமானப்படுத்தினார் என்று புகாரில் மஞ்சு வாரியர் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து கேக் வெட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர், தயாரிப்பு நிர்வாகி சாஜி சி ஜோசப், மஞ்சுவாரியரின் ஆடிட்டர் மற்றும் அதில் பங்கேற்றவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்தனர். மேலும் சிலரிடம் விசாரணை நடத்த உள்ளனர். இதனால் இந்த வழக்கு பரபரப்பாகி உள்ளது.