ரஜினி படத்தில் 3 கதாநாயகிகள்?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள தர்பார் படப்பிடிப்பு முடிந்து டப்பிங், ரீரிக்கார்டிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் போன்ற தொழில் நுட்ப பணிகள் நடக்கின்றன. இதில் கதாநாயகியாக நயன்தாரா வருகிறார்.

Update: 2019-12-02 00:46 GMT
சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகிபாபு, தம்பி ராமையா ஆகியோரும் உள்ளனர். பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை சிவா இயக்குகிறார். ஏற்கனவே கார்த்தியின் சிறுத்தை, அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை சிவா இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் புதிய படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

இது அவருக்கு 168-வது படம். கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. இந்த படத்துக்கு கதாநாயகி மற்றும் இதர நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது. நகைச்சுவை வேடத்தில் சூரி நடிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். ரஜினியுடன் சூரி நடிக்கும் முதல் படம் இதுவாகும்.

படத்தில் 3 கதாநாயகிகள் உள்ளனர் என்றும் இதற்காக குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரிடம் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

3 கதாநாயகிகள் இருப்பதால் ரஜினிகாந்தும் இரண்டு அல்லது மூன்று கதாபாத்திரங்களில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது.

மேலும் செய்திகள்