கர்நாடகாவில் படப்பிடிப்பில் விஜய்யை காண திரண்ட ரசிகர்கள்

பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு டெல்லி உள்ளிட்ட சில பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்தது.

Update: 2019-12-16 23:20 GMT
கர்நாடகாவில் உள்ள ஷிமோகா சிறையில் முக்கிய காட்சிகளை படமாக்கி வருகின்றனர். இதற்காக விஜய் அங்குள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.

விஜய்யை காண தினமும் ஓட்டல் முன்பும் சிறைச்சாலை எதிரிலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி மணிக்கணக்கில் காத்து நிற்கிறார்கள். அவர்களை சந்திக்க விஜய் நேரம் ஒதுக்குகிறார். படப்பிடிப்புக்கு புறப்பட்டு செல்லும்போது சில நிமிடங்கள் வெளியே கூடி நிற்கும் ரசிகர்களை பார்த்து கையசைக்கிறார்.

அதுபோல் படப்பிடிப்பு முடிந்து ஒட்டலுக்கு திரும்பும்போது சிறைச்சாலை எதிரில் நிற்கும் ரசிகர்களை பார்த்தும் சில நிமிடங்கள் கையசைக்கிறார். கர்நாடகாவிலும் விஜய்க்கு ஏராளமாக ரசிகர்கள் திரள்வது பலருக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய் ரசிகர்களை பார்த்து கையசைக்கும் புகைப்படங்களும் வீடியோவும் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

இது விஜய்க்கு 64-வது படம் ஆகும். ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜூன்தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், தீனா, ஆண்ட்ரியா, ரம்யா, கவுரி கிஷான் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்