வாட்ஸ்-அப்பில் ‘தர்பார்’ படம் வெளியீடு; கமிஷனர் அலுவலகத்தில், பட நிறுவனம் புகார்

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படம் கடந்த 9-ந்தேதி திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அந்த படம் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியானது.

Update: 2020-01-11 22:08 GMT
சென்னை, 

வாட்ஸ்-அப்பிலும், தற்போது  ‘தர்பார்’ திரைப்படம் வெளியாகி, படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்த சூழ்நிலையில் ‘தர்பார்’ படத்தை தயாரித்த ‘லைகா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பி.கண்ணன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார். அவருடன் திரைப்பட தயாரிப்பாளர்கள் டி.சிவா, ராஜன் ஆகியோரும் வந்திருந்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘தர்பார்’ படம் வெற்றிக்கரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில் அந்த படத்தை வாட்ஸ்-அப்பில் ஒருவர் வெளியிட்டு, ‘தர்பார்’ படம் பார்க்க யாரும் தியேட்டருக்கு செல்லவேண்டாம். இந்த படம் வசூலே ஆகக்கூடாது. அடிச்சு காலி பண்ணுங்க’ என்ற குரல் பதிவையும் பதிவு செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருக்கிறோம். வாட்ஸ்-அப்பில் ‘தர்பார்’ படம் பார்ப்பவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்பதால், யாரும் பார்க்க வேண்டாம்.

இந்த குரல் பதிவை வெளியிட்டவரை அடையாளம் காட்டுபவருக்கு ‘லைகா’ நிறுவனம் தக்க சன்மானம் வழங்கும். தியேட்டரில் இருந்து படத்தை பதிவு செய்திருக்கிறார்கள். ‘க்யூப்’ சோதனையில் எந்த தியேட்டர் என்பது தெரிந்துவிடும். அதன்பேரில் அந்த தியேட்டர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்தநிலையில் படத்தை வாட்ஸ்-அப்பில் வெளியிட்ட நபர் அடையாளம் காணப்பட்டு விட்டார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்