நடிகை பாவனா படப்பிடிப்பில் தீவிபத்து

நடிகை பாவனா படப்பிடிப்பில் தீவிபத்து ஏற்பட்டது.

Update: 2020-01-18 00:34 GMT

தமிழில் சித்திரம் பேசுதடி, வெயில், தீபாவளி, கூடல் நகர், ஜெயம் கொண்டான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பாவனா மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். கன்னட பட தயாரிப்பாளர் நவீனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிக்கிறார்.

தற்போது சிவாராஜ் குமார் ஜோடியாக கன்னட படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹர்ஷா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் நடந்து வருகிறது. பெரிய அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்துகிறார்கள்.

இந்த அரங்கில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது திடீர் தீவிபத்து ஏற்பட்டது. அப்போது நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் 200-க்கும் அதிகமானோர் அங்கு இருந்தனர். தீவிபத்து ஏற்பட்டதும் சிவராஜ் குமார் உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் அனைவரும் அலறி அடித்து வெளியே ஓடினார்கள்.

தீவிபத்து தடுப்புக்கு ஏற்கனவே முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து இருந்ததால் அதன்மூலம் தீயை அணைத்தனர். இதில் படப்பிடிப்பு அரங்கின் ஒரு பகுதி எரிந்து சாம்பல் ஆனது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. படத்தின் இயக்குனர் ஹர்ஷா கூறும்போது, “அதிக செலவு செய்து உருவாக்கிய அரங்கின் ஒரு பகுதி மின் கசிவு காரணமாக எரிந்து விட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை” என்றார்.

மேலும் செய்திகள்