விஜய் படத்தை இயக்க பார்த்திபன் விருப்பம்

நடிகர் பார்த்திபன் விஜய் படத்தை இயக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-18 23:00 GMT
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்துக்கு பிறகு விஜய்யின் புதிய படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. டைரக்டர் ஷங்கர், பேரரசு, ஏ.ஆர்.முருகதாஸ், அட்லி, அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபடுகின்றன.

இந்த நிலையில் நடிகர் பார்த்திபனும் விஜய் படத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். ரசிகர் ஒருவர் டுவிட்டரில் விஜய்யும், பார்த்திபனும் இணைந்தால் செம மாஸ் என்ற பதிவை வெளியிட்டார். இதற்கு பார்த்திபன் வெளியிட்டுள்ள பதில் பதிவில், “மாஸுக்கு மாஸ்டரை பிடிக்கும். மாஸ்டருக்கு இந்த நண்பனை பிடிக்கும். நண்பன் படத்தை என்னையே முதலில் இயக்க சொன்னார். அழகிய தமிழ் மகனுக்கு எழுத சொன்னார். நாளை இன்னும் அடுத்த கட்டத்தில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

பார்த்திபனின் இந்த பதிவு விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. விஜய்யும், நீங்களும் இணைந்தால் ஆஸ்கார் நிச்சயம் என்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். பார்த்திபன் நடித்து இயக்கிய ஒத்த செருப்பு படம் திரைக்கு வந்து வித்தியாசமான கதையம்சத்தில் வரவேற்பை பெற்றது. விருதுகளும் கிடைத்தது.

இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. ஹாலிவுட் படமொன்றிலும் பார்த்திபன் நடிக்க உள்ளார்.

மேலும் செய்திகள்